ஹைதராபாத்தில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்சி 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
சாகர் சிங் சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. தூண்களுக்கு மேல் பலகைகளை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென அதன் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பொறியாளர் மற்றும் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் ஒருவரின் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் ரோஹித் குமார், புனேத் குமார், சங்கர் லால் மற்றும் ஜிதேந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.