பிகார் குடிபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரி மாநிலம், பஷ்சிம் சம்பரன் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அசோக் யாதவ். இவர் இன்று காலை பள்ளிக்கு குடிபோதையில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொது சுகாதார குழு தலைவரும், பஞ்சாயத்து குழு உறுப்பினருமான அர்த்ராஜ் யாதவ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரைத்தொடர்ந்து கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்தனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து கல்வி அலுவலர் கூறியதாவது, இதுபோன்ற நடத்தை பொறுத்துக்கொள்ளப்படாது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிகார் மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.