தில்லி கலால் கொள்கை தொடர்புடைய ஊழல் வழக்கில் கைதான முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவிடம் அமலாக்கத்துறையினர் இன்று மதியம் விசாரணை நடத்தி அவற்றைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021-22 ஆம் ஆண்டில் தில்லி கலால் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்துவதில் ஊழல் தொடர்பாக சிபிஐ பிப்ரவரி 26 அன்று சிசோடியாவை கைது செய்தது. அவர் மார்ச் 20ம் தேதி வரை காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மதுபான தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளை திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்ட நிலையில், காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராபின் டிஸ்டில்லரீஸ் எல்.எல்.பி என்ற நிறுவனத்தில் பிள்ளை ஒரு பங்களிப்பாக இருந்தவர். அவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கே கவிதா மற்றும் பிறருடன் தொடர்புடைய 'தெற்கு குழு'மதுபானக் கார்டலை பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமலாக்கத்துறை கூறினர்.
கைது செய்யப்பட்ட மதுபான தொழிலதிபர் சமீர் மஹந்த்ரு, அவரது மனைவி கீதிகா மஹந்த்ரு மற்றும் அவர்களது நிறுவனமான இந்தோஸ்பிரிட் குழுமத்துடனும் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் பிள்ளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார். அவரை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.