தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விபாசனா(தியானம் கூடம்) அறை வழங்கப்படவில்லை என்று தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பரத்வாஜ் கூறுகையில்,
தில்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட சிசோடியா மார்ச் 20 வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியா சிறையில் உள்ள மற்ற கைதிகளுடன் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விபாசனா அறை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி நீதிமன்றத்தில் சிறையின் விபாசனா அறையில் மணீஷ் சிசோயைவை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.
நீதிமன்றம் ஒப்புதல் அளித்தபின்பும், சிசோடியா சிறை எண் 1-ல் குற்றவாளிகளுடன் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மூத்த குடிமகனாக உள்ள தனி நபருக்கான திகார் சிறை எண்-1 க்குள் சிசோடியா அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். ஆனால், மற்ற கைதிகளுடன் சிசோடியா அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பகவத் கீதை, கண்ணாடி மற்றும் மருந்துகளை சிறைக்குக் கொண்டு செல்ல அனுமதித்த நீதிமன்றம், விபாசனா தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு திகார் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.