மணீஷ் சிசோடியா சிறையிலிருந்து வெளிவருவதை விரும்பாத விசாரணை அமைப்புகள்: ஆம் ஆத்மி
தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது மற்றொரு பொய்யான வழக்கினை மத்திய விசாரணை அமைப்புகள் பதிந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளின் இந்த பொய்யான வழக்குகளினால் மணீஷ் சிசோடியாவால் சிறையிலிருந்து வெளிவர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா கூறியதாவது: தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது மத்திய விசாரணை அமைப்பினால் மற்றொரு பொய்யான வழக்குப் பதியப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த இடத்தில் இருக்கும் பிரதமரை மணீஷ் சிசோடியா உளவு பார்த்ததாகவும், விசாரணை அமைப்புகளுக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உளவு வேலை கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் மணீஷ் சிசோடியா சிறையிலிருந்து வெளிவரக் கூடாது என விசாரணை அமைப்புகள் செய்யும் வேலையாகும். இந்தியாவின் பகுதிகளை கைப்பற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. ஆனால், விசாரணை அமைப்புகள் மணீஷ் சிசோடியா மீது பொய்யான வழக்குகளை பதிந்து வருகிறது என்றார்.
தில்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.