குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பாவகத் மலை அடிவாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் புதிதாகக் கட்டப்பட்ட வளைவு மேற்கூரையின் கற்கள் திடீரென இடிந்து விழுந்தததில் ஒரு பெண் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில்,
பாவகத் மலையின் உச்சியில் காளி தேவியின் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.
பாவகாட்டின் அடிவாரத்தில் கற்களால் கட்டப்பட்ட வளைவு போன்ற மேற்கூரை சமீபத்தில் கட்டப்பட்டது. அது பக்தர்களின் ஓய்வு அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்ததில் பெண்கள் உள்பட ஒன்பது பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் ஹலோல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வதோதராவுக்கு மாற்றப்பட்டனர். உயிரிழந்தவர் கங்காபென் தேவிபூஜக்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்கூரை கட்டட விபத்துக்கு சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் பாவகத் மலையில் மேம்படுத்தப்பட்ட காளி மாதாவின் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.