மணிப்பூர் பற்றி எரியும்போது பிரதமர் இப்படி கூறலாமா? கபில் சிபல் கேள்வி
மணிப்பூரில் வன்முறை அதிகரித்து கொளுந்துவிட்டு எரிகிறது. ஆனால், கர்நாடகத்தின் அமைதிக்கு காங்கிரஸ் எதிரியாக இருந்து வருகிறது என பிரதமர் கூறி வருவதாக மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தினால் இதுவரை 9000 பேர் அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் கலவரம் வெடித்து பழங்குடியின மக்கள் குறிவைக்கப்படுகின்றனர். ஆனால், கர்நாடகத்தின் அமைதிக்கு எதிரியாக காங்கிரஸ் இருந்து வருவதாக பிரதமர் கர்நாடகத்தில் பேசி வருகிறார். மணிப்பூர் கொளுந்துவிட்டு எரிகிறது. தேவாலயங்களுக்கு தீ வைக்கப்படுகின்றது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் 5,415 வகுப்புவாத கலவரங்கள் மணிப்பூரில் நிகழ்ந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 10,900 பேர் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். பாஜக அமைதியின் அடையாளமா? எனப் பதிவிட்டுள்ளார்.