அமிர்தசரஸ்:பொற்கோயில் அருகே கடந்த 5 நாள்களில் 3 குறைந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட சம்பவத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே இன்று அதிகாலை 12.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
முன்னதாக, கடந்த மே 6 மற்றும் 8-ஆம் தேதிகளில் இதே பகுதிகளில் பலத்த சப்தத்துடன் இரு குறைந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர்.
இன்று காலை சந்தேகத்தின்பேரில் பொற்கோயில் அருகே ஒரு பெண் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் விசாரித்தனர். தொடர்ந்து, குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேரைக் கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாநிலம் காவல்துறைத் தலைவர் கெளரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் 5 பேரும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பட்டாசு தயாரிக்கும் பொருள்களை கொண்டு குண்டுவெடிப்பு நிகழ்த்தியுள்ளதாகவும் பஞ்சாப் டிஜிபி கூறியுள்ளார்.
பஞ்சாப் காவல்துறை தரப்பில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர்கள் சந்திப்பின்போது முழு விவரங்கள் அளிக்கப்படவுள்ளன.