கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில் தனது தந்தை சித்தராமையா முதல்வராக வேண்டும் என அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 119, பாஜக-74, மஜத -26, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான யதீந்திரா சித்தராமையா,'காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாஜகவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க எதையும் செய்வோம்.
கர்நாடக மக்கள் நலனுக்காக எனது தந்தை முதல்வராக வேண்டும். ஒரு மகனாக நான் நிச்சயமாக அவரை முதலமைச்சராகப் பார்க்க விரும்புகிறேன். அவரது கடந்த ஆட்சியில் மிகச்சிறந்த ஆட்சி இருந்தது. இந்த முறையும் அவர் முதல்வராக இருந்தால் ஊழல் மற்றும் தவறான ஆட்சியின் போக்கு களையப்படும் என்றார்.
இதையும் படிக்க | கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸ் 114 தொகுதிகளில் முன்னிலை!