கேரளத்தில் மருத்துவர் ஒருவர் நோயாளியால் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, கேரளத்தில் மருத்துவர்களைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கேரளத்தில் கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்காரா பகுதி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த வந்தனா தாஸ்(22) என இளம் பெண் மருத்துவர், தனது நோயாளியால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு மருத்துவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்று மருத்துவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கேரள உயர்நீதிமன்றமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அந்த மசோதாவுக்கு இன்று கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.