தில்லியில் பெண்களுக்கு பேருந்தை நிறுத்தாமல் செல்வதாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போன்று தில்லியிலும் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. தில்லி மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டமின்றி பெண்கள் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில், பெண்கள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் சில ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தாமல், செல்வதாகவும், இலவசமாக பயணம் செய்வதால் உரிய இடத்தில் நிறுத்தாமல் தள்ளிச் சென்று நிறுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், தில்லியில் பேருந்தில் ஏற காத்திருந்த பெண்ணையும் தாண்டி பேருந்து நிற்காமல் சென்ற விடியோவை சுட்டிக்காட்டி, சுட்டுரையில் கருத்து பதிவிட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், இலவசமாக பயணிப்பதால், பெண்களுக்கு தங்களின் நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்துவதில்லை என புகார்கள் எழுகின்றன. இந்த செயலை பொருத்துக்கொள்ள முடியாது. மிகவும் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.