நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மிகவும் கேவலமான கேள்விகளை கேட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வெளிநடப்பு செய்தார்.
அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் கடிதம் எழுதியிருந்தாா். தா்ஷன் ஹீராநந்தானியும் இதனை ஒப்புக்கொண்டிருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி இன்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக மஹுவா மொய்த்ரா ஆஜரானார்.
அப்போது மஹுவா மொய்த்ரா எங்கெங்கு சென்றார்? எங்கு தங்கினார்? என்பது போன்ற கேள்விகளை நாடாளுமன்றக் குழு கேட்டுள்ளது. மேலும் மொபைல்போன் ரெக்கார்டிங்குளை கேட்டுள்ளது.
இதையடுத்து மிகவும் கேவலமாக கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறி மஹுவா மொய்த்ரா மற்றும் குழுவில் இருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மொய்த்ராவிடம் நெறிமுறைகள் குழுத் தலைவரின் கேள்விகள் கண்ணியமற்றவை, நெறிமுறையற்றவை என காங்கிரஸ் எம்.பி.யும் குழு உறுப்பினருமான உத்தம் குமார் ரெட்டி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் வினோத் சோங்கர் கூறுகையில், 'கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக, மொய்த்ரா நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார். குழு ஆலோசித்து அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யும்' என்றார்.
இதையும் படிக்க | தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ. 4,000: ராகுல் காந்தி அறிவிப்பு