

மகாராஷ்டிரத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர். மேலும் 10 பேர் தீயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புளூஜெட் ஹெல்த்கேர் லிமிடெட் தொழிற்சாலையில் இன்று காலை 11 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட போது சுமார் 15-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, வாயு கசிவே வெடி விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ மளமளவென பரவியது, சற்று நேரத்தில் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மற்ற அலகுகளுக்கும் தீ பரவத் தொடங்கியது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து தீயைக் கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தொழிற்சாலையில் கருமையான புகை வெளியேறிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் சிக்கியிருந்த 5 பேரை மீட்டனர். அவர்களில் இருவரின் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மூவர் ஆபத்தான நிலையில் மஹத் கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மருந்து தொழிற்சாலையில் 10 பேருக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.