ஆந்திர மாநிலத்தில் விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
‘மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும்’ என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு, மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. பல்வேறு மாநிலங்களிலும் இதற்கான கோரிக்கை எழுந்திருப்பதோடு, தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆந்திரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அந்த மாநில அரசு முடிவு செய்து, அதற்கு மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம் முடிவு குறித்து மாநில செய்தி மற்றும் பொதுத் தொடா்புத் துறை அமைச்சா் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா கூறுகையில், ‘விரிவான ஆலோசனைக்குப் பிறகு மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று, அவா்களின் வாழ்வு மேம்பட இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்று முதல்வா் அப்போது குறிப்பிட்டாா்’ என்றாா்.