பாகிஸ்தான் அரசு 80 இந்திய மீனவர்களை விடுதலை செய்து இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தது.
கடந்த வியாழக்கிழமை 80 இந்திய மீனவர்களை கராச்சியிலுள்ள மிலார் சிறையிலிருந்து பாகிஸ்தான் அரசு விடுவித்தது. அந்த 80 மீனவர்களும் அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பஞ்சாப் காவல் அதிகாரி அருண் மஹால் கூறியதாவது, 'அனைத்து விடுவிக்கப்பட்ட கைதிகளும் வெள்ளிக்கிழமை இரவில் அட்டார்-வாகா எல்லைக்கு தரைவழியாகக் கொண்டுவரப்பட்டனர். இந்திய உயர் ஆணையத்தின் அவசரகால போக்குவரத்துச் சான்றிதழ் மூலம் தரைவழிப் போக்குவரத்துக்கு நடைபெற்றது.
இந்திய மருத்துவக் குழுவின் மூலம் திரும்பி வந்த மீனவர்களுக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என அருண் மஹால் தெரிவித்தார்.
மேலும், இந்த மீனவர்கள் மூன்று வருடங்களுக்கு முன் அரேபியக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தவறுதலாக நுழைந்ததால் பிடிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.
மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததும் குனிந்து நிலத்தைத் தொட்டு தங்கள் மரியாதையயையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.
மேலும், இதுபோன்ற மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு, அரேபியக் கடலில் இந்திய, பாகிஸ்தான் எல்லைகள் சரிவர வரையறுக்கப்படாததே காரணமாகச் சொல்லப்படுகின்றன. மீனவர்களிடம் எல்லைக்குள்ளேயே இருப்பதை உறுதி செய்வதற்கு தகுந்த தொழில்நுட்பக்கருவிகள் இல்லாததும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.