இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தீபாவளியை முன்னிட்டு தேநீர் விருந்தளித்தார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஆகியோருக்கு தீபாவளி தேநீர் விருந்து அளித்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், “தீபாவளி தினத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அழைத்ததில் மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடியின் தீபாவளி வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன். இந்தியாவும், இங்கிலாந்தும் இருநாடுகளுக்கான நட்புறவை மறுவடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியின் அன்பான விருந்தோம்பலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஐந்துநாள் அதிகாரப்பூர்வ பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: “இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருகின்றன. ஜெய்சங்கரின் இங்கிலாந்து பயணத்தின்போது அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லியை சந்தித்து கலந்துரையாட உள்ளார். மேலும் பல்வேறு உயர் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.