கோவா விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் தெருநாய் நுழைந்ததால் தரையிறங்க வேண்டிய விஸ்தாரா விமானம் பெங்களூருவிற்கு திருப்பியனுப்பப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள் கிழமையன்று மதியம் 12.55 மணியளவில், விஸ்தாரா விமானம் யுகே 881 பெங்களூரிலிருந்து கோவாவிற்குக் கிளம்பியது. ஆனால் தெருநாய் ஒன்று கோவா விமானநிலையத்தின் ஓடுதளத்திற்குள் நுழைந்ததால் தரையிறங்க முடியாமல் திரும்பிச்சென்று மதியம் 03.05 மணியளவில் மீண்டும் பெங்களூரில் தரையிறங்கியுள்ளது.
'அதிகாரிகள் ஓடுதளத்திற்குள் தெருநாய் நுழைந்ததை உறுதி செய்தபின் விமானத்தைத் தரையிறக்க வேண்டாம் என்றும் சற்று நேரம் காத்திருக்கும் படியும் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் விமானி, பாதுகாப்புக் கருதி மீண்டும் பெங்களூருவிற்கே திரும்பிவிட விரும்பியதால் விமானம் திருப்பியனுப்பப்பட்டதாக கோவா விமானநிலையத்தின் இயக்குநர் எஸ்.வி.டி தனம்ஜெய ராவ் தெரிவித்தார்.
இதையும் படிக்க : மணல் குவியலில் கார் மோதி விபத்து
மீண்டும் மாலை 4.55 மணிக்கு பெங்களூருவிலிருந்து கிளம்பிய விமானம் 6.15 மணிக்கு கோவாவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல்களை விஸ்தாரா நிறுவனம் உடனுக்குடன் தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விமானம் திருப்பி அனுப்பப்பட்டது மற்றும் மீண்டும் பெங்களூருவிலிருந்து கிளம்பிய தகவல்கள் விஸ்தாராவின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.
இதுகுறித்து மேலும் பேசிய இயக்குநர் ராவ், இது போன்று தெருநாய்கள் ஓடுதளத்திற்குள் நுழைந்துவிடும் சம்பவங்கள் எப்போதாவது நடப்பதுண்டு. தகவல் அறிந்தபின் ஊழியர்களைக் கொண்டு உடனே அந்த பிரச்னை சரி செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார். எனது பதவிக் காலத்தில் இது போன்ற பிரச்னைகள் நடப்பது இதுவே முதல் எனவும் தெரிவித்துள்ளார்.