வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய உணவுக் கழகத்தின் மூலம் 2.84 லட்சம் டன் கோதுமை மற்றும் 5,830 டன் அரிசி ஏலத்தில் விற்பனையாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய உணவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சந்தையில் சில்லறை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரிசி மற்றும் கோதுமை ஆகிய உணவு தானியங்களை வாராந்திர ஏலம் மூலம் விற்பனை செய்யும் ‘திறந்த சந்தை விற்பனை திட்டத்தை’ மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி, 3 லட்சம் டன் கோதுமை மற்றும் 1.79 லட்சம் அரிசி விற்பனைக்கான 21-ஆவது மின்-ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் பங்கேற்ற 2,334 வியாபாரிகளுக்கு 2.84 லட்சம் டன் கோதுமை மற்றும் 5,830 டன் அரிசி விற்பனை செய்யப்பட்டது.
உயா் ரக கோதுமைக்கான இருப்பு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,150-ஆக நிா்ணயிக்கப்பட்டு சராசரி விற்பனை விலை ரூ.2,246.86-க்கு விற்பனையானது. அதற்கு அடுத்தடுத்த ரக கோதுமைக்கான இருப்பு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,125-ஆக நிா்ணயிக்கப்பட்டு, சராசரி விற்பனை விலை ரூ.2232.35-க்கு விற்பனையானது.
கோதுமையை மாவாக மாற்றி மாநிலங்களின் நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ ரூ. 27.50-க்கு மிகாமல் விற்பனை செய்ய கூட்டுறவு நிறுவனங்களுக்கு 2.5 லட்சத்துக்கும் மேலான டன் கோதுமை ஒதுக்கப்பட்டுள்ளது. பதுக்கலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பரவலாக 1917 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.