உத்திர பிரதேசத்தில் 23 வயது இளம்பெண் மீது மர்மநபர்கள் அமிலம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் தரௌலி கிராமத்தில், வியாழக்கிழமை இரவு 23 வயது இளம்பெண்ணும், அவரது தாயாரும் சந்தையில் இருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், இளம்பெண் மீது அமிலம் வீசி தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் பெண்ணின் முகம் மற்றும் உடலில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டன.
உடனே அந்த பெண், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடயவியல் குழுவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வரும் டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.