கடந்த 10 மாதங்களில் இந்திய எல்லைக்குள் நுழைந்த 69 டிரோன்களைப் பிடிபட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளது. பிடிபட்ட அணைத்து டிரோன்களும் போதைப் பொருள்களைக் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட டிரோன்களில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்பட்டவைகள் எனத் தெரிவித்துள்ளனர். அவையணைத்தும் நான்கு இறக்கைகளைக் கொண்ட குவாட்காப்டர் ரக டிரோன்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 31 வரை மொத்தம் 69 டிரோன்கள் இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்முவில் கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிபட்ட மொத்த டிரோன்களில் 60 டிரோன்கள் பஞ்சாப் எல்லையிலும் மற்ற 9 டிரோன்கள் ராஜஸ்தான் எல்லையிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜனவரியில் 1, மார்ச்சில் 3 என விரிந்த எண்ணிக்கை கடந்த அக்டோபரில் மட்டும் மொத்தம் 21 டிரோன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அதில் 19 பஞ்சாப்பிலும் 2 ராஜஸ்தான் எல்லைகளிலும் பிடிபட்டுள்ளன.
இதையும் படிக்க : தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு
ஜனவரி 2020லிருந்து கடந்த அக்டோபர் வரை 93 டிரோன்கள் பிடிபட்டுள்ள நிலையில், 2022லிருந்து இந்திய எல்லைக்குள் டிரோன்கள் நுழைவது அதிகரித்துள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரவில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் பறந்து நுழையும் இந்த டிரோன்கள் 500கிராம் முதல் ஒரு கிலோ அளவிலான போதைப் பொருள்களை சுமந்து வருகின்றன. இந்த டிரோன்களில் அதிகமாக ஹெராயின் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். சில டிரோன்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் வானில் சுடப்பட்டும் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.