ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 55.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் அண்மையில் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படிக்க: காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்: சிபி ஜோஷி
மொத்தம் 199 தொகுதிகளில் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களின் வெற்றி தோல்வியை இன்று வாக்களிக்க தகுதியுள்ள சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா்.
வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பகல் 3 மணி நிலவரப்படி 55.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.