‘இதயம் மிகவும் கனமாக உள்ளது’: அரவிந்த் கேஜரிவால்

‘இதயம் மிகவும் கனமாக உள்ளது’: அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன நாளில் தொண்டர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால் இதயம் மிகவும் கனமாக உள்ளதாக உருக்கமாகப் பேசினார்.
Published on

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன நாளில் அக்கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தொண்டர்களிடையே பேசினார்.

கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது, “இந்திய வரலாற்றிலேயே ஆம் ஆத்மி கட்சி அளவுக்கு குறிவைக்கப்பட்ட வேறு கட்சி கிடையாது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியின் மீது 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. 

நாட்டில் உள்ள அத்தனை விசாரணை அமைப்புகளும் ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்துள்ளன. ஆனால் அவர்களால் இன்றுவரை ஒரு ஆதாரத்தைக் கூட திரட்ட முடியவில்லை. இதுவே ஆம் ஆத்மி கட்சியினரின் நேர்மைக்கு சான்றாகும்.

2012 ஆம் ஆண்டு இதே நாளில் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினோம். இன்று வரை ஏராளமான ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டோம். மிகக் கடினமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் ஒருபோதும் நாம் சோர்வடைந்து விடவில்லை.

எனது இதயம் மிகவும் கனமாக உள்ளது. மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் மற்றும் விஜய் நாயர் ஆகியோர் இல்லாமல் கொண்டாடப்படும் முதல் நிறுவன நாள் இதுவாகும். அவர்கள் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு வளைப்பதற்கு பாஜகவுக்கு தெரியும். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினரை அவர்களால் வளைக்க முடியவில்லை. இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் உடைந்து போகவோ அல்லது பாஜகவிடம் விலைபோகவோ இல்லை என்பது நமக்குப் பெருமையான விஷயம்.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “சாதாரணமாக தொடங்கப்பட்ட கட்சி இன்று தேசியக் கட்சியாக வளர்ந்துள்ளது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com