சுரங்கப்பாதைக்கு வெளியே... இனிப்பு, மாலைகளுடன் குடும்பத்தினர்

சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அவர்களை வரவேற்க குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.
சுரங்கப்பாதைக்கு வெளியே... இனிப்பு, மாலைகளுடன் குடும்பத்தினர்

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அவர்களை வரவேற்க மாலைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இனிப்புகளுடன் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.

மருத்துவர்கள் குழுவினரும், தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். அவர்களில் மனநல மருத்துவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சுரங்கப் பாதைக்குள் ஆம்புலன்ஸ்கள் பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. தொழிலாளர்களை உடனடியாக ஆம்புலன்ஸ்களில் ஏற்றும் பணியும் தயார் நிலையில் உள்ளது. அவசர உதவிக்கு 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்து.

குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்று, குழாய்க்குள் பஞ்சு போன்ற மெத்தை அமைக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பணி நிறைவு பெற்றதும் தொழிலாளர்கள் வெளியே வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்கப் பாதைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் சுரங்கப்பாதைக்கு உள்ளே சென்றுள்ளன. சுரங்கத்துக்குள்ளிலிருந்து தொழிலாளர்கள் இன்னும் சில  மணி நேரத்துக்குள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுமார் 17 நாள்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்குப் பணியில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தயார்நிலையில் மருத்துவக் குழு உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவும் 41 தொழிலாளர்கள் வெளியே பத்திரமாக திரும்ப வேண்டும் என்று செய்த பிரார்த்தனை நிறைவேறியிருக்கிறது.

தொழிலாளர் குடும்பத்தினர் உணர்ச்சிபெருக்குடன் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டனரா என்பதையும், வெளியே வந்த தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற ஆவலுடன் நலம் விசாரித்தபடியும் இருக்கிறார்கள்.

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் 17 நாள்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளா்களை விரைந்து மீட்கும் வகையில், மலைப் பகுதியில் செங்குத்தாக துளையிடும் பணியோடு, சுரங்க இடிபாடுகள் பகுதியில் கிடைமட்டமாக துளையிடும் பணியை தொடரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சுரங்கத்தின் மறுமுனையான பா்கோட் வழியாகவும் கிடைமட்டமாக மூன்றாவது துளையிடும் பணியும் தொடங்கியது.

மலைப் பகுதியில் செங்குத்தாக 86 மீட்டா் ஆழத்துக்கு துளையிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், செவ்வாயக்கிழமை 3.30 மணிக்கு குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு பெற்றது.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.

தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதுடன், இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் மற்றும் கைப்பேசி, அதற்கான மின்னேற்றிகளும் அனுப்பப்பட்டன.

இதனிடையே, இடிபாடுகளிடையே 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயை 60 மீட்டா் தொலைவுக்குச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் நடந்தன.

குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடை கொண்ட ஆகா் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் நிலவியது.

இதனிடையே, மலையின் மேல் பகுதியிலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு, துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்று தொழிலாளர்கள் மீட்கப்படவிருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com