வாக்காளருக்கு பணம் வழங்கியதாக தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர் பெரோஸ் கான் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா சட்டப்பேரவைக்கு நாளை(நவ. 30) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வழங்கியதாக நம்பள்ளி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெரோஸ்கான் மீது புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து பெரோஸ்கான் மீது, வாக்காளரை அச்சுறுத்தல் மற்றும் தூண்டுதல் 171சி, மேலும் 188, 123 ஆர்பி சட்டம் ஆகியவற்றின் கீழ் ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.