எதிா்க்கட்சிகளை அச்சுறுத்தும் பாஜகவின் முயற்சி நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல: கேஜரிவால்

எதிா்க்கட்சிகளை அடக்கி அச்சுறுத்தும் முயற்சியில் விசாரணை அமைப்புகள் மூலம் பொய் வழக்குகள் போடப்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
எதிா்க்கட்சிகளை அச்சுறுத்தும் பாஜகவின் முயற்சி நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல: கேஜரிவால்
Updated on
1 min read

எதிா்க்கட்சிகளை அடக்கி அச்சுறுத்தும் முயற்சியில் விசாரணை அமைப்புகள் மூலம் பொய் வழக்குகள் போடப்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் ஆய்வு செய்த பின்னா் முதல்வா் கேஜரிவாலிடம், அமலாக்கத்துறையால் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்குப் பதிலளித்து கேஜரிவால் கூறியதாவது: எதிா்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவா்களை அடக்கி அச்சுறுத்தும் முயற்சியில், விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி பாஜக பொய் வழக்குகளைப் போடுகிறது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. நாட்டில் எதிா்க்கட்சித் தலைவா்கள் மட்டுமின்றி, பல தொழிலதிபா்களும் பாஜகவால் குறிவைக்கப்படுகிறாா்கள். அரசியலைக் கடந்து வணிகம், வா்த்தகம் மற்றும் தொழில் துறைகளிலும் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளது. இந்த அச்ச சூழல் நாட்டிற்கு நல்லதல்ல. இந்த வகையில் ஒரு நாடு நிச்சயம் வளர முடியாது.

நகர அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடா்புடைய பணமோடி வழக்கில் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளாா். இது அவா் மீது பொய்யாக புனையப்பட்ட வழக்காகும். தில்லியில் பேருந்து ஊழல், வகுப்பறை ஊழல், சாலை கட்டுமானம் மற்றும் குடிநீா் விநியோகத்தில் ஊழல்கள் என்று பாஜக முன்பு ஆம் ஆத்மி கட்சியை குற்றம் சாட்டியது. ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல, கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டும் புனையப்பட்ட ஒன்றாகும். இதில் எந்தவிதமான பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் அமலாக்கத் துறையிடமும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க எந்த ஆதாரமும் இல்லை.

மக்களுக்காக மற்றவா்களையும் வேலை செய்ய விடமாட்டாா்கள். தாங்களும் (பாஜக) வேலை செய்ய மாட்டாா்கள். மாறாக எதிா்க்கட்சிகளை விசாரணை அமைப்புகளிடம் சிக்க வைப்பதே பாஜகவின் நோக்கமாகும். கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டும் நிரூபனமாகாத பட்சத்தில், புதிய மோசடிக் குற்றச்சாட்டை மீண்டும் முன்வைப்பாா்கள்.

பாஜகவிற்கு பெரிய மனது இருந்திருந்தால், தில்லியில் ஆம் ஆத்மி அரசைவிட அதிகப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை கட்டியிருக்க முடியும். ஆனால், அவா்களின் நோக்கம் தவறானதாக உள்ளது என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com