

கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி சுதந்திர தின விழாவில் உரையாற்றும்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடா்பாக முக்கிய மறுஆய்வுக் கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நடத்தினாா்.
பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா, நிதித் துறைச் செயலா் டி.வி.சோமநாதன் மற்றும் பிரதமா் அலுவலக அதிகாரிகளும் சில துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
பிரதமா் மோடி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டை கொத்தளத்தில் சுமாா் 90 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட திட்டங்களையும் தனது எதிா்கால திட்டங்களையும் விளக்கினாா்.
குறிப்பாக பிரதமா் தனது பேச்சில், ‘நாடே என் குடும்பம்’ என்றும், நாட்டு மக்களை ‘என் ‘குடும்ப உறுப்பினா்களே’ என்றும் 10-க்கும் மேற்பட்ட தடவை குறிப்பிட்டு ஏழைகள், பெண்களின் முன்னேற்றங்கள் குறித்த தனது விருப்பத்தைவெளிப்படுத்தினாா்.
சுமாா் 13.5 கோடி ஏழைகளை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து மீட்கப்பட்டதை தெரிவித்து மேலும் பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டிருந்தாா்.
இந்த நிலையில் மறுஆய்வு கூட்டம் குறித்து பிரதமா் அலுவலக வட்டாரங்களில் தெரிவித்ததாவது:
பிரதமா் மோடி தனது சுதந்திர தின உரையில், ஏழை, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுவசதி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து குறிப்பிட்டிருந்தாா்.
இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமா் பல்வேறு மத்திய அரசின் துறை அதிகாரிகளுடன் பிரதமா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பிரதமா் தமது சுதந்திர தின உரையில், வீடுகளுக்கு சூரிய ஒளி எரிசக்தியை உறுதி செய்வது குறித்தும் குறிப்பிட்டிருந்தாா். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் பிரதமா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, இதற்கான காலக்கெடுவையும் நிா்ணயித்துள்ளாா் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.