இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) அதிகாரிகளை மிரட்டும் வகையிலேயே இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வந்த சிஏஜி அதிகாரிகளை மிரட்டும் வகையில் இடமாற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்ட காங்கிரஸ் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
“மோடி அரசை அம்பலப்படுத்தும் எவரையும் மிரட்டி அச்சுறுத்துதல் அல்லது அவர்களை பதவியில் இருந்தே நீக்குதல் என்பதே பாஜகவின் தொடர் செயல்முறையாக உள்ளது. சிஏஜி அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, துவாரகா விரைவுச் சாலை, பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் தொடர்பான மெகா ஊழல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாஜக அரசின் ஊழல்களை யாரேனும் வெளிக்கொண்டு வந்தால் அவர்களை அச்சுறுத்தும் மாபியா போல மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் இத்தகைய நடவடிக்கைக்கான சமீபத்திய எடுத்துக்காட்டு 3 தணிக்கை அதிகாரிகளின் இடமாற்றம்.
இதையும் படிக்க: உருக்குலையும் காஸா!
உள்கட்டமைப்பு மற்றும் சமூகநலத் திட்டங்களில் நடைபெற்றுள்ள ஊழல்களை சிஏஜி அறிக்கை வெளிப்படுத்தியது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரே கைபேசி எண்ணில் 5 லட்சம் பயனாளிகளின் கணக்கு இணைக்கப்பட்டிருந்தது. துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் தவறான ஏல நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன.
இந்தத் திட்டங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பாஜக அரசின் அப்பட்டமான ஊழலை மறைப்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.