திருமணமான பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க அனுமதித்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்திய மத்திய அரசின் மனு மீது இரு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை நடத்தியது.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணின் 26 வார கருவை கலைக்க அனுமதி அளித்து அக்டோபர் 9 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மத்திய அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை இருவிதமான மாறுபட்ட தீர்ப்பை அறிவித்தது.
நீதிபதி ஹீமா கோஹ்லி, 27 வயது பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளிக்க விரும்பவில்லை என்று கூறி தீர்ப்பளித்தார். அதே நேரம் நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 9-ஆம் தேதி உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மத்திய அரசின் விண்ணப்பத்தை நிராகரித்து, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.
இதையும் படிக்க: சிஏஜி அதிகாரிகள் இடமாற்றம் குறித்து காங்கிரஸ் விமர்சனம்
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஹீமா கோஹ்லி மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் விசாரணைக்கு வைக்கப்படும் என்று கூறியது.
அந்தப் பெண் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருவதாகவும், உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் மூன்றாவது குழந்தையை வளர்க்கும் நிலையில் இல்லை என்று கூறியதையடுத்து, அந்த பெண்ணின் கருவை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த திங்களன்று அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.