மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் வீர வெங்கட சத்யநாராயணா என்ற விசாரணைக் கைதி, டெங்கு பாதிப்பால் உயிரிழந்தாா். இதே கதியை, சந்திரபாபு நாயுடுவுக்கும் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் நாரா லோகேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து நாரா லோகேஷ் முறையிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாரா லோகேஷ்,
“மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சிறையில் சந்திரபாபு அடைக்கப்பட்டிருப்பது குறித்தும், பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஆட்சியை தவறாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான கிஷன் ரெட்டியும் உடனிருந்தார்.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலும், ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.