ஸ்ரீஹரிகோட்டா: மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தாமதமாக சனிக்கிழமை (அக். 21) காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாதிரி விண்கல சோதனை மீண்டும் காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு விண்கலம் ஏவப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி - டி1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவு வரை அனுப்பி, மீண்டும் அதைப் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டுவந்து வங்கக் கடலில் இறக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ ஈடுபடும். பின்னா், கடலிலிருந்து கலன் மீட்கப்படும்.
பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கிலோ மீட்டா் உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாகப் பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்பட உள்ளது.
கடல் நீரில் கலன் விழுந்தவுடன் இந்திய கடற்படையின் சிறப்புக் கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பா். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, விண்ணுக்கு மனிதா்களைப் பாதுகாப்பாக அனுப்பும் நுட்பம் உறுதி செய்யப்பட உள்ளது.
20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் சோதனை நிறைவுபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.