மிசோரமில் சோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது கட்சி பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.
அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் மிசோரமும் ஒன்று. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதனை முன்னிட்டு பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இம்மாதம் 30-ஆம் தேதி மிசோரம் செல்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி மிசோரம் வரும்போது அவருடன் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்று பாஜக கூட்டணியில் உள்ள சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ராவணனாக நடிக்கும் கே.ஜி.எஃப் யாஷ்!
இதுதொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “மணிப்பூரை சேர்ந்த மெய்தி இன மக்கள், நூற்றுக்கணக்கான தேவாலயங்களை எரித்துள்ளனர். இதனால் மிசோரம் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த நேரத்தில் பாஜகவுடன் சேர்ந்தால் எங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.
எனவே, பிரதமர் மோடி பிரச்சாரத்துக்காக மிசோரம் வரும்போது நான் அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ளமாட்டேன். அவர் தனியாக பிரச்சாரம் செய்யட்டும், நான் தனியாக பிரச்சாரம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.