ஜாதிவெறி மற்றும் பிராந்தியவாதத்தால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் மோடி நேற்று (அக்டோபர் 24) பேசியிருந்தார். இதனையடுத்து ஜாதிவெறி குறித்த பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா இன்று (புதன்கிழமை) பதிலளித்துள்ளார்.
ஜாதி குறித்து கருத்து தெரிவிக்கும் முன்பு பிரதமர் மோடி அதுகுறித்து கொஞ்சமேனும் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சமச்சீரற்ற வளர்ச்சியால்தான் பிராந்தியவாதம் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாகவே பிராந்திய கட்சிகள் உருவாகின்றன.
அரசு அமைப்புகளில் ஏன் ஓபிசி மக்களுக்கான உரிய பங்கு இல்லை என்று கேட்டால் இது ஜாதிவெறியா? பிரதமர் மோடி இவ்வாறு பேசி திசைதிருப்புவதை தவிர்க்க வேண்டும். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அண்ணல் அம்பேத்கர் எழுதிய 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' புத்தகத்தை படிக்குமாறு மோடிக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன் என மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.
1936-ஆம் ஆண்டு ஜாட்-பட்-தோடக் மண்டல் மாநாட்டில் பேசுவதற்கு அண்ணல் அம்பேத்கர் தயார் செய்த உரையே பின்னர் 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' என்னும் நூலாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.