மகாராஷ்டிரத்தின் புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபாவின் சமாதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
ஒருநாள் பயணமாக மகாராஷ்டிரம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி, ஷீரடி சாய்பாபா கோயிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார்.
கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஷீரடி கோயிலில் புதிய தரிசன வரிசை வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, நில்வண்டே அணையைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
மேலும், ஷீரடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்பின்னர், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கோவா செல்கிறார்.