உத்தரகண்ட் மாநிலம் சார்பில் டிசம்பர் 8, 9-ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்கு, தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 26) சென்னையில் நடைபெற்றது.
அதில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுரப் பகுகுணா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது: “தொழில் முதலீட்டை ஈர்க்க உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் டிசம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. முதலீட்டாளர்களின் முகவரியாக உத்தரகண்ட் திகழ்ந்து வருகிறது.
இதையும் படிக்க: தேர்தல் ஆணைய விளம்பர தூதராக ராஜ்குமார் ராவ் நியமனம்!
அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் விமானம், ரயில், சாலை என எளிதில் அணுகும் வகையில் இணைப்பு வசதிகள் உள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில், மருத்துவம், சுற்றுலா, கல்வி என பல துறைகளில் தொழில் துவங்குவோருக்கு சலுகைகள் வழங்க 30 கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் உத்தரகண்ட் இடையே கலாச்சாரத் தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கணநூல் எழுதிய அகத்தியரின் ஆசிரமம் உத்தரகண்டில் உள்ளது. வடமாநிலங்களில் உத்தரகண்டில் மட்டும்தான் முருகன் கோவில் உள்ளது. சமீபத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்பட்டதுபோல, உத்தரகண்டில் உத்தரகண்ட் தமிழ்ச் சங்கமம் வெகுசிறப்பாக நடத்தப்படவுள்ளது” என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.