லக்னௌ, காசியாபாத்தில் கொள்ளை வழக்கில் தலைமறைவான குற்றவாளி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கீர்த்தி சிங்(19) என்ற மாணவி வெள்ளிக்கிழமை கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது அவரது தொலைபேசியைப் பறிக்கும் முயற்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், மாணவியை ஆட்டோவிலிருந்து வெளியில் இழுத்ததில் சாலை தடுப்பின் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, கல்லூரி மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவந்த நிலையில், ஞாயிறன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க சோதனைச் சாவடியை அமைத்துத் தேடி வந்த நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டினர். போலீஸார் இருவரையும் நோக்கிச் சுட ஆரம்பித்தனர்.
அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மற்றொருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இறந்தவர் ஜிதேந்திரா என அடையாளம் காணப்பட்டது. அவர் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை இரவு, மற்ற கொள்ளையனான பாபில் மசூரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். இதற்கிடையில், கொள்ளையர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கீர்த்தியின் தந்தை கோரியுள்ளார்.