தில்லி: அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் அமாலாக்கத்துறை முன் திங்கள்கிழமை நேரில் ஆஜராகியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரசாரத்தி ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கு பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் பணித் தோ்வு வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பான விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவா் தோதஸ்ரா உள்ளிட்டோர் வீட்டில் கடந்த வாரம் சோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இருந்தபோதும், இந்த விவகாரம் தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணையின்போது சமா்ப்பிக்க கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ஆவணங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளதால், அமலாக்கத்துறை முன்பாக வேறு தேதியில் ஆஜராக அனுமதிக்குமாறு வைபவ் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜராகி வைபவ் கெலாட் விளக்கம் அளித்து வருகிறார்.
தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளது.