இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
முதலில் லேண்டர் தரையிறங்கிய நிலையில் பின்னர் ரோவரும் தரையிறங்கி நிலவு மேற்பரப்பின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வந்தது.
இந்த புகைப்படங்களின் மூலமாக நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(சல்ஃபா்) இருப்பதை பிரக்யான் ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், சந்திராயன் - 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் தரையிறக்கப்பட்ட பிரக்யான் ரோவரின் பணிகள் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஞானவாபி மசூதி ஆய்வு: 8 வாரங்கள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை!
மேலும், ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த சூரிய உதயத்தின்போது (செப்.22) ஒளியைப் பெரும் வகையில் சோலார் பேனல்கள் தயார் நிலையில் இருப்பதால் மீண்டும் பணிகளைத் துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை சூரிய ஒளி படவில்லையென்றால் இந்தியாவின் நிரந்தர தூதராக ரோவர் நிலவில் இருக்கும் என்றும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது!