ஹைதராபாத்: வங்கிப் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், ஒரு லாக்கரைக் கூட உடைக்க முடியாமல், தங்களது திருட்டு முயற்சி தோல்வி அடைந்து திரும்புகையில், வங்கியின் பாதுகாப்பு முறைக்கு நற்சான்றிதழ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹைதராபாத் அருகே மஞ்சேரியல் மாவட்டம், நென்னல் மண்டலத்தில் உள்ள தெலங்கானா கிராமீனா வங்கியில், வியாழக்கிழமை இரவு திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. காலையில் ஊழியர்கள் வங்கியை திறக்க வந்த போது, வங்கியின் முக்கிய நுழைவாயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.
இதையும் படிக்க.. ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
ஆனால், வங்கிக்குள் எந்த லாக்கரையும் உடைக்க முடியவில்லை. அப்போதுதான், வங்கியில் இருந்த ஒரு நாளிதழில், திருடர்கள், இவ்வாறு எழுதிவிட்டுச் சென்றிருந்ததை ஊழியர்கள் பார்த்தனர்.
இங்கே எனது கைவிரல் ரேகை எங்கும் பதிவாகியிருக்காது. நல்ல வங்கி. ஒரு பைசாவைக் கூட திருட முடியவில்லை. எனேவே என்னைத் தேட வேண்டாம் என்று திருடர்கள், வங்கிக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர், வங்கியில் எந்தப் பொருளும் திருடப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
வங்கியில் உள்ள சிசிடிவி கேமராக்களில், திருடர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இவர்கள் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த திருடர்களாக இருப்பர் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவர்கள் முகத்தை மூடியிருந்தாலும், தொழில்முறை திருடர்களாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.