இந்தியா கூட்டணியின் பெயரை 'பாரதம்' என்று மாற்றினால் மத்திய அரசு அந்த பெயரையும் மாற்றுமா? என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் நடைபெறும் ஜி20 மாநாடையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள விருந்தினர் அழைப்பிதழில் 'பாரத குடியரசுத் தலைவர்' (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்தியா என்ற பெயர் 'பாரதம்' எனக் குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால், 'பாரதம் என பெயர் மாற்றத்துக்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் வதந்திகளை கேள்விப்பட்டேன். ஏன் இப்படி நடக்கிறது? எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. கூட்டணியின் பெயரை 'பாரதம்' என்று மாற்றினால் மத்திய அரசு அந்த பெயரையும் மாற்றுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | ஆசிரியர் தினம்: பாரதம் எனக் குறிப்பிட்டு ஆளுநர் வாழ்த்து!
அதாவது 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியதால் மத்திய பாஜக அரசு அந்த பெயரை மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்தியா கூட்டணியால் பாஜக மிகவும் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதிலிருந்து மக்களை திசைதிருப்பவே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை முன்மொழிந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 'சனாதனம்' குறித்த பேச்சுக்கு 'சனாதன தர்மத்தில் இருந்துதான் நானும் வந்தேன். பலரும் அதைச் சேர்ந்தவர்கள். அனைத்து மதங்களுக்கும் மக்கள் மதிப்பளிக்க வேண்டும்' என்றார்.
இதையும் படிக்க | இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற நடவடிக்கை?