உத்தர பிரதேசத்தில் கோசி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கேரள புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல திரிபுராவில் போக்ஸநகர், தன்புர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க | புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன் வெற்றி! புதிய சாதனை!!
ஆனால் பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் கோசி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, 16 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் தாரா சிங்கைவிட சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் சுதாகர் சிங் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
இதனால் கோசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி பெறும் சூழலே அதிகம் உள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌகான் கடந்த 2022 தேர்தலில் சமாஜவாதி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவுக்கு மாறியதால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அவர் அதில் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணியில் ம.ஜ.த.; 4 தொகுதிகள் ஒதுக்கீடு!