

கட்சியில் உட்கட்சி பூசல் எதுவும் இல்லை என்று மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மஜத கட்சிக்குள் உட்கட்சி பூசல் எதுவும் இல்லை. 19 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளனர். தனிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் அதை நாங்கள் கையாள்வோம். அனைத்தையும் எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மஜத -பாஜக கூட்டணியின் ஊகங்களுக்கு மஜத மாநிலத் தலைவர் இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை பதிலளித்தார். மஜத இதுவரை எந்த இறுதி முடிவுகளையும் எடுக்கவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம், பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற நடிகை சுமலதா, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாா்.
காங்கிரஸ், மஜத தலா ஒரு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தோ்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இத் தகவலை கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா உறுதி செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.