ஆக்ராவில் உள்ள சிறார்கள் காப்பகத்தில், குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பேற்றிருக்கும் அரசுப் பராமரிப்பாளர்களே சிறுமிகளை செருப்பால் அடிப்பது, கை, கால்களை கட்டி வைப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் சிசிடிவி விடியோ வெளியாகியிருக்கிறது.
ஆக்ராவில் உள்ள அரசு சிறார் காப்பகத்தின் காப்பாளராக இருக்கும் பெண் அலுவலர், காப்பகத்தில் இருக்கும் சிறுமிகளுக்கு சொல்லொணாத் துயரத்தைக் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் அடிப்படையில், இந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு, காப்பகத்தின் பொறுப்பாளர் பூனம் பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரயாக்ராஜ் பகுதியில் இருந்த சிறார் காப்பகத்தின் பொறுப்பாளராக இருந்த போதும் இதே தவறை மேற்கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், தற்போது நடந்த சம்பவம் செப்டம்பர் 4ஆம் தேதி பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பூனம் பால், ஏற்கனவே, பிரயாக்ராஜ் சிறார் காப்பாகத்தில் பணியாற்றியபோது, 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்ததாகவும் அந்த விடியோவுடன் பகிரப்பட்டுள்ளது.
அந்த விடியோவில், பூணம் பால், காப்பகத்தில் உள்ள ஒரு படுக்கையில் படுத்திருக்கும் சிறுமியை, அங்கிருக்கும் செருப்பை எடுத்து கண்மூடித்தனமாக அடிக்கிறார். பிறகு, அருகே இருக்கும் ஒரு படுக்கையில் பல சிறுமிகள் ஒன்றாக படுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நோக்கி கத்துகிறார். இது அனைத்தும் விடியோவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து பூனம் பாலிடம் ஐஏஎன்எஸ் செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, என்னுடைய கருத்தை நான் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் விளக்கிவிட்டேன். இதைத் தவிர எனக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.