உத்தரப் பிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்து ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன்விளைவாக ஆனந்த் நகர்ப் பகுதியில் உள்ள பழைய ரயில்வே காலனியில் அமைந்துள்ள வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.
முன்னதாக, வீட்டின் கட்டடம் பாதுகாப்பற்றது நிலையில் உள்ளதால், அங்கு வசிப்பவர்களை காலி செய்யுமாறு ரயில்வே அறிவித்திருந்தது. அங்கிருந்த அனைத்து குடும்பங்களும் மாற்று இடத்திற்குச் சென்ற நிலையில், விபரீதம் அறியாமல் ஒரு குடும்பம் மட்டும் அங்கு வசித்து வந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் குழு மற்றும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.