புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை இடம்பெயர்ந்தனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.
இதனையடுத்து, பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படத்தை இன்று காலை எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து மூத்த உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில், பகல் 12.45 மணியளவில் பழைய நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.
இன்னும் சற்றுநேரத்தில் புதிய கட்டடத்தில் இரு அவைகளிலும் அலுவல்கள் தொடங்கவுள்ளன.