மத்திய பாஜக அரசு கொடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்ட நகலில் முகவுரையில் 'மதச்சார்பற்ற', 'சோசலிச' என்ற இரு வார்த்தைகளைக் காணவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (செப். 18) தொடங்கியது. நேற்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கப்பட்டபோது அரசியலமைப்புச் சட்டத்தின் நகல் அனைத்து எம்.பி.க்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதில் முகவுரையில் 'மதச்சார்பற்ற'(secular), 'சோசலிச'(socialist) என்ற இரு வார்த்தைகளை காணவில்லை என்று காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறியுள்ளார்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 1947ல் தயாரித்து ஒப்புதல் வழங்கப்பட்ட அரசியலமைப்பின் நகல்தான் வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் சட்டதிருத்தத்தின் மூலமாக பின்னர்தான் சேர்க்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ஆனால், மிகவும் புத்திசாலித்தனமாக இரு வார்த்தைகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும் மிகப்பெரிய இந்த பிரச்னையை நாங்கள் எழுப்புவோம் என்றும் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றம்சாட்டினார்.
இன்று மக்களவைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
அரசியலமைப்பில் பல்வேறு முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட 1976 ஆம் ஆண்டின் 42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மூலமாகவே 'மதச்சார்பற்ற'(secular), 'சோசலிச'(socialist) என்ற இரு வார்த்தைகளும் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய பாஜக அரசு தற்போது வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்ட நகரில் இந்த இரு வார்த்தைகள் இல்லாதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.