புது தில்லி: புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன் இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86.
இரண்டு நாள்களுக்கு முன்புதான் தனது 86வது பிறந்தநாளைக் கொண்டாடிய சரோஜா வைத்தியநாதன், புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
கடந்த சில காலமாக புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த அவர், வியாழக்கிழமை காலை 4 மணிக்கு வீட்டிலேயே உயிரிழந்ததாக அவரது மருமகளும் நடனக் கலைஞருமான ரமா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சரோஜா வைத்தியநாதன், 2002ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ மற்றும் 2013ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றவர்.
பிரபல பரத நாட்டியக் கலைஞரான சரோஜா வைத்தியநாதன், புது தில்லியில் நாட்டியாலயா நடனப் பள்ளியை நடத்தி வந்தார். தில்லியில் செயல்பட்டு வரும் கணேசா நாட்டியாலயா நடனப் பள்ளியில் பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பலரும் உலகின் பல இடங்களில் பரதநாட்டிய பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.