தேசிய ஜனநாயகக் கூட்டணி பலவீனமாக உள்ளது என்றும் அதிமுக மட்டுமல்ல மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் என்று சிவசேனை(உத்தவ் தாக்கரே தரப்பு) எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இந்தியா கூட்டணியை அமைத்தபோதுதான் பாஜகவினருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த நினைப்பு வந்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மோடி ஒருவரே போதும். ஆனால் இந்தியா கூட்டணி உருவானபோது அவர்கள் கூட்டணிக்கு மோடி ஒருவர் மட்டும் போதுமானதாக இல்லை. அவர்களுக்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.
இதையும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக அணிக்குப் பாதிப்பு?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனை(உத்தவ் தாக்கரே தரப்பு), அகாலி தளம் கட்சிகள் தற்போது இல்லை. இந்த இரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்மையான பலமான கட்சிகளாக இருந்தன. ஆனால் தற்போது இருக்கும் பாஜக கூட்டணி பலவீனமாக உள்ளது. அதிமுக மட்டுமல்ல, மேலும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியில் இருந்து உடையும். 2024 ஆம் ஆண்டுக்குள் பாஜக மூழ்கிவிடும்' என்றார்.
முன்னதாக, அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவதாக அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்?