
பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
கல்லூரிகளில் செல்ஃபி பாய்ண்ட்ஸ் அமைக்குமாறு கூறிய பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலைக் குறிப்பிட்டு ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “நமது பிரதமர் சுயபடம் எடுப்பதிலேயே மூழ்கியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருக்கிறார். சரிந்து கொண்டிருக்கும் அவரது பிம்பத்தைக் காப்பாற்றுவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு தயாராக உள்ளார்.
முதலில் ராணுவத்தை செல்ஃபி பாய்ண்ட் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். அதன்பிறகு மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ரத யாத்திரைக்கு அழைத்து வந்தார். தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செல்பி பாய்ண்ட் அமைக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கு முன்பு சந்திரயான்-3 நிலவில் இறங்கியபோது நேரலையில் தோன்றி அந்த நிகழ்வு முழுவதையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். அதற்கும் முன்னதாக, அனைத்து கரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் இவரது படத்தை அச்சிட்டு வழங்கினார்.
இவையெல்லாம் பிரதமர் மோடியின் பாதுகாப்பின்மை உணர்வு மற்றும் அருவருப்பான பண்புகளுக்கு சில உதாரணங்கள் மட்டுமே. பத்தாண்டு கால ஆட்சியில் மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் பிரதமர் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.
வடகொரிய சர்வாதிகாரிகளைப் போன்ற நிலையை பிரதமர் மோடி எட்டியுள்ளார். அவற்றுக்கு பொருத்தமான பதிலை பொதுமக்கள் விரைவில் கொடுப்பார்கள்.” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.