ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ஜெய்ப்பூர் காவல் ஆணையாளர் பிஜு ஜார்ஜ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மூன்று பேர் கோகமேடியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திக்க வேண்டுமென்று கோகமேடியின் பாதுகாவலர்களிடம் கூறியுள்ளனர்.
பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றபின், அவர்கள் கோகமேடியிடம் சுமார் 10 நிமிடம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கோகமேடி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான நவீன் சிங் ஷெகாவத்தும், துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் கோகமேடியின் வீட்டிற்கு வெளியே ஒரு நபரிடம் இருந்து பறித்த இருசக்கரவாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களை விரைவில் பிடிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்று தெரிவித்தார்.
கோகமேடியின் வீட்டிற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச்சூட்டில் கோகமேடியின் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.