பிரிந்து வாழ்ந்து வரும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துக் கேட்டு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லாவும் அவரது மனைவி பாயல் அப்துல்லாவும் பிரிந்து வாழ்கிறார்கள்.
ஏற்கனவே, விசாரணை நீதிமன்றம், ஒமர் அப்துல்லாவின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2016ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் குடும்ப நல நீதிமன்றம், விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஒமர் அப்துல்லா மேல்முறையீடு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிந்து வாழும் மனைவி பாயல் அப்துல்லா தன்னை கொடுமைப்படுத்தியதாக, ஒமர் அப்துல்லா கூறியிருந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது.
மனைவியால் தான் துன்புறுத்தப்பட்டதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை ஒமர் அப்துல்லா நிரூபிக்கவில்லை என்று குடும்ப நல நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்திருந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது.